
கொரனா (Covid 19) எனும் பெரும்தொற்று காரணமாக உலகெங்கிலும் உள்ள மக்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்நோக்கி வருவது யாவரும் அறிந்ததே.
காரைநகரில் வாழும் மக்களும் இப்பெரும்தொற்றால் பல்வேறு பிரச்சனைகளை எதிநோக்கி வருகிறார்கள். காரைநகருக்கு சேவையாற்றவென உருவாக்கப்பட்ட எமது சங்கம் தன்னாலான உதவிகளை செய்ய முடிவெடுத்து முதலாம் கட்டத்தை கடந்த வருடம் (2020) எல்லா மக்களுக்குமென வழங்கியிருந்தது.
அதன் இரண்டாம் கட்ட நிவாரணமாக பொருளாதாரத்தில் பின்தங்கிவாழும் மக்களுக்கு வழங்க எமது நிர்வாகம் தீர்மானித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் தரவுகளை தந்து உதவுமாறு காரைநகர் பிரதேச செயலாளரிடம் (DS) கோரிக்கை ஒன்றை வைத்தோம்.
காரைநகர் பிரதேச செயலாளர் (DS) காரைநகரில் உள்ள கிராம சேவையாளர்கள் ஊடாக தரவுகளை திரட்டி 408 குடும்பங்களிற்கு நிவாரண உதவி வழங்குமாறு எமக்கு கோரிக்கை வைத்தார்.

குறிப்பிடப்பட்ட குடும்பங்களுக்கு முத்திரை/கைசாத்துக்களை வழங்கி அவற்றை காரைநகர் பலநோக்கு சங்க கிளைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற பாவிக்கும் ஒரு திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்தினோம். ஒவ்வொரு கிராமசேவையாளரிடமும் முத்திரையினை மக்களிடையே பங்கிடும் பொறுப்பினை வழங்கினோம்.
- எங்கும் காணப்படும் கொரானா சூழ்நிலை காரணமாக பயனாளிகளை சந்திக்கும் முயற்சியில் நாம் இறங்கவில்லை. ஆனால் பயனாளிகளை உரிய நிவாரணம் போய்சேரும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்ட திட்டத்தினை நடைமுறைப்படுத்தினோம்.
- குடும்பங்களிற்கான நிவாரண தொகை குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாறுபடும். ஆரம்ப தொகையாக 2,500 வும் உச்ச தொகையாக 5,500 வும் முடிவு செய்யப்பட்டு, உரியவர்களுக்கு ஒதுக்கப்பட்ட முத்திரைகள் போய்சேரும் முறையில் வடிவமைக்கப்பட்டது. மொத்த நிவாரண பெறுமதி 1.7 மில்லியன் ரூபா ஆகும்.







குறித்த கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு அண்மித்த காரைநகர் பலநோக்கு கூட்டுறவுச்சங்க கிளைகளினால், முத்திரப்பெறுமதிக்கான நிவாரணப்பொருட்கள் 05.08.2021 இலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. (கொரானா சூழ்நிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட நபர்கள் எனும் அடிப்படையில் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது.)
மக்கள் சேவையே மகேசன் சேவை.